ஹர ஹர நம: பார்வதி பதயேஹர ஹர மஹா தேவா

Wednesday, April 11, 2012

திருமுதுகுன்றம் பழமலைநாதர்













































நமசிவாயஎன்ற மந்திரத்திற்கு ஐந்தெழுத்து. இதுபோல், கடலூர் மாவட்டம் விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயிலில் தீர்த்தம், கொடிமரம், நந்தி, கோபுரம், பிரகாரம், தேர் என எல்லாமே ஐந்து தான்.
அப்பர், சம்பந்தர், சுந்தரர் காலத்தில் இத்தலம் பழமலைஎன்று அழைக்கப்பட்டது. காலப்போக்கில் விருத்தாசலம்என்ற சொல்லால் அழைக்கப்பட்டது. “விருத்தம்என்றால் பழமை.” “அசலம்என்றால் மலை.” காலத்தால் மிகவும் முற்பட்டது இந்த மலை. தேவாரத்திருப்பதிகங்களில் அதே பொருளில் திருமுதுகுன்றம் என்று போற்றப்படுகின்றது. சிவபெருமான் முதன் முதலில் இங்கு மலை வடிவில் தான் தோன்றினார் என்றும், இந்த மலை தோன்றிய பின்பு தான் உலகில் உள்ள அனைத்து மலைகளும் தோன்றியது என்றும், திருவண்ணாமலைக்கும் முந்திய மலை என்றும் புராணங்கள் கூறுகின்றன.
இத்தலம் முன்பொரு காலத்தில் குன்றாக இருந்ததாம். விபசித்து முனிவர் முத்தா நதியில் நீராடி, இரவு திருக்கோயிலில் தங்கியதால் அருள் கிடைக்கப்பெற்று, திருப்பணி செய்யும் பேறு பெற்றார். இத்திருக்கோயிலில் தலமரமாக உள்ள வன்னி மரத்தின் இலைகளை திருக்கோயிலின் திருப்பணியின்போது விபசித்து முனிவர் தொழிலாளருக்கு வழங்கினார். அந்த இலைகள் அவர்களின் உழைப்பிற்கு ஏற்றவாறு பொற்காசுகளாக மாறியது என்பது வாய்வழிக்கதை. இந்த வன்னிமரம் 1700 ஆண்டுகளுக்கு முன்பானது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
ஒருமுறை, சுந்தரர் திருவாரூரில் நடக்கும் பங்குனி உத்திர விழவில் அடியார்களுக்கு அன்னதானம் செய்ய, பொருள் சேகரிக்க ஒவ்வொரு தலமாகச் சென்றார். இத்தலம் வரும் போது இறைவன் சுந்தரருக்கு 12 ஆயிரம் பொன்னைத் தந்தார். திருவாரூர் செல்லும் வழியில் கள்வருக்கு பயந்து, இந்த பொன் அனைத்தையும் இங்குள்ள மணிமுத்தார்று நதியில் போட்டு விட்டு இறைவனின் அருளால் திருவாரூர் குளத்தில் மூழ்கி எடுத்தார். இதை அடிப்படையாகக் கொண்டே, “ஆற்றிலே போட்டு குளத்தில் தேடுவது போல்என்ற பழமொழி தோன்றியது.
28 லிங்கங்கள்: சைவ சமயத்தில் 28 ஆகமங்கள் உண்டு. இவற்றை 28 இலிங்கங்களாக இத்தலத்தில் முருகப்பெருமான் பிரதிஷ்டை செய்து பூஜை செய்துள்ளார். இந்த இலிங்கங்கள் கோயிலின் வடமேற்குப் பகுதியில் தனி சன்னதியில் அமைந்துள்ளன. இதில் தெற்கு வரிசையில் உள்ள இலிங்கங்களின் நடுவில் விநாயகரும், மேற்கு வரிசையில் உள்ள இலிங்கங்களின் நடுவில் வள்ளி தெய்வானையுடன் முருகனும் அருள்பாலிக்கின்றனர்.
28 ஆகமங்களுக்குரிய பெயர்களான காமிகேஸ்வரர், யோகேஸ்வரர், சிந்தியேஸ்வரர், காரணேஸ்வரர், அஜிதேஸ்வரர், தீபதேஸ்வரர், சூட்சமேஸ்வரர், சகஸ்ரேஸ்வரர், அம்சுமானேஸ்வரர், சப்பிரபேதேஸ்வரர், விசயேஸ்வரர், விசுவாசேஸ்வரர், சுவயம்பேஸ்வரர், அநலேஸ்வரர், வீரேஸ்வரர், இரவுரவேஸ்வரர், மகுடேஸ்வரர், விமலேஸ்வரர், சந்திரஞானேஸ்வரர், முகம்பிபேஸ்வரர், புரோத்கீதேஸ்வரர், இலலிதேஸ்வரர், சித்தேஸ்வரர், சந்தானேஸ்வரர், சர்வோத்தமேஸ்வரர், பரமேஸ்வரர், கிரணேஸ்வரர், வாதுளேஸ்வரர் என்ற பெயர்கள் அவற்றுக்கு சூட்டப்பட்டுள்ளன. இந்த அமைப்பு வேறு எங்கும் காண இயலாத சிறப்பாகும். இக்கோயிலை ஆகமக்கோயில் என்றும் அழைப்பார்கள்.
இக்கோயிலில் எல்லாமே ஐந்து தான்.
ஐந்து மூர்த்தங்கள்: விநாயகர், முருகன், சிவன், சக்தி, சண்டிகேஸ்வரர்.
இறைவனின் ஐந்து திருநாமம்: விருத்தகிரீஸ்வரர், பழமலைநாதர், விருத்தாசலேஸ்வரர், முதுகுன்றீஸ்வரர், விருத்தகிரி.
ஐந்து விநாயகர்: ஆழத்து விநாயகர், மாற்றுரைத்த விநாயகர், முப்பிள்ளையார், தசபுஜ கணபதி, வல்லப கணபதி.
இறைவனை தரிசனம் கண்டவர்கள்: உரோமச முனிவர், விபசித்து முனிவர், குமார தேவர், நாத சர்மா, அனவர்த்தினி.
ஐந்து கோபுரம்: கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் கண்டராதித்தன் கோபுரம்.
ஐந்து பிரகாரம் (திருச்சுற்று): தேரோடும் திருச்சுற்று, கைலாய திருச்சுற்று, வன்னியடித் திருச்சுற்று, அறுபத்து மூவர் திருச்சுற்று, பஞ்சவர்ணத் திருச்சுற்று.
ஐந்து நந்தி: இந்த நந்திகளுக்கு இந்திரநந்தி, வேதநந்தி, ஆத்மநந்தி, மால்விடைநந்தி, தர்மநந்தி என்று பெயர்.
ஐந்து உள் மண்டபம்: அர்த்த மண்டபம், இடைகழி மண்டபம், தபன மண்டபம், மகா மண்டபம், இசை மண்டபம்.
ஐந்து வெளி மண்டபம்: இருபது கால் மண்டபம், தீபாராதனை மண்டபம், நூற்றுக்கால் மண்டபம், விபசித்து மண்டபம், சித்திர மண்டபம்.
ஐந்து வழிபாடு: திருவனந்தல், காலசந்தி, உச்சிகாலம், சாயரட்சை, அர்த்த ஜாமம்.
ஐந்து திருவிழா: வைகாசி வசந்த உற்சவம், ஆனி திருமஞ்சனம், ஆடிப்பூரம், திருக்கல்யாணம், மார்கழி திருவாதிரை, மாசிமகம் 10 நாள் பிரம்மோற்ஸவம்.
ஐந்து தேர்: விநாயகர் தேர், முருகன் தேர், பழமலை நாதர் தேர், பெரியநாயகி தேர், சண்டிகேஸ்வரர் தேர்.
தலத்தின் ஐந்து பெயர்: திருமுதுகுன்றம், விருத்தகாசி, விருத்தாசலம், நெற்குப்பை, முதுகிரி.
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் கிரிவலம் நடைபெறுகிறது. தல விருட்சம் வன்னிமரம் 1700 ஆண்டுகள் பழமையானது. இத்தலத்தில் பிறந்தால், வாழ்ந்தால், வழிபட்டால், நினைத்தால், இறந்தால் என இந்த ஐந்தில் ஏதேனும் ஒன்று நடந்தால் கூட முக்தி நிச்சயம். காளஹஸ்தியில் உள்ளது போல, இங்குள்ள விநாயகர் 18 படியிறங்கிச் சென்று தரிசிக்கும்படி அமர்ந்துள்ளார். இந்த ஆழத்து விநாயகர் மிகவும் பிரசித்தி பெற்றவர். ஒருமுறை உலகம் அழிந்த போது இந்தத்தலம் மட்டும் அழியாமல் இருந்தது என்ற புராணச் சிறப்பைப் பெற்றது. சிவத்தலங்கள் அனைத்திலும் 1008 தலங்கள் சிறப்பானதாக கூறப்படும். இதில் நான்கு தலங்கள் முக்கியமானவை. அதில் விருத்தாசலமும் ஒன்று. தேவர்களுக்காக இறைவன் இங்கு நடனம் ஆடியுள்ளார். சிதம்பரத்தில் சிவன் போட்டிக்காக ஆடிய தலம் என்றும், இத்தலம் சிவன் சந்தோஷத்திற்காக ஆடிய தலம் என்றும் கூறுவர்.
இங்குள்ள அர்த்த மண்டபத்தில் 4 வேதங்களே 4 தூண்களாக அமைந்துள்ளன.
இத்தல தீர்த்தமான மணிமுத்தாறு நதியில், இறந்தவர்களின் அஸ்தியை கரைத்தால், அது கல்லாக மாறி நதியிலேயே தங்கிவிடுவதாக தல புராணம் சொல்கிறது.
பெரியநாயகியம்மை பதிகம், க்ஷத்திரக்கோவை வெண்பா, பழமலை நாதர் அந்தாதி, பெரியநாயகி விருத்தம், கலித்தொகை, பிக்ஷாடன நவமணி மாலை, குருதரிசனப்பதிகம், பிள்ளைத்தமிழ் ஆகிய நூல்களும் இத்தலத்திற்குரியது.
கர்நாடக மன்னன் இத்தலம் வந்த போது பசியால் வாடினான். அப்போது பெரியநாயகி இளமை வடிவெடுத்து பாலூட்டி அவனுக்கு குமார தேவர் என்று பெயர் சூட்டினாள்.
தேவாரப்பதிகம்:
ஆடிஅசைந்து அடியாரும் நீரும் அகந்தொறும் பாடிப் படைத்த பொருளெலாம் உமையாளுக்கோ மாட மதிலணி கோபுரம் மணி மண்டபம் மூடி முகில்தவழ் சோலை சூழ் முதுகுன்றரே.
-சுந்தரர்.
தேவாரப்பாடல் பெற்ற நடுநாட்டுத்தலங்களில் இது 9 வது தலம்.
திருவிழா:
பிரம்மோற்சவம் - மாசி மாதம் - 10நாட்கள். 9 வது நாள் தேர்.
ஆடிப்பூரம் - 10நாட்கள் திருவிழா - அம்பாள் விசேசம் - திருக்கல்யாணம் - கொடி ஏற்றி அம்பாள் வீதி உலா.
வசந்த உற்சவம் - வைகாசி மாதம் -10 நாட்கள் திருவிழா.
ஆனித்திருமஞ்சனம், ஆருத்ரா தரிசனம், கந்தர் சஷ்டி, சூரசம்காரம் ஆகியவையும் சிறப்பாக நடைபெறுகிறது. ஒவ்வொரு பௌர்ணமியன்றும் பெரியநாயகருக்கும்(உற்சவர்) சிறப்பு அபிசேகம் நடைபெறுகிறது. பௌர்ணமி அம்மாவாசை மற்றும் பிரதோச நாட்களிலும் விசேடம்.
பிரார்த்தனை:
இங்குள்ள ஈசனை வழிபடுவோர்க்கு மனநிம்மதி கிடைக்கும். இது உடல் சம்பந்தப்பட்ட எந்த நோயானாலும் தீருகிறது. இத்தலத்து துர்க்கையம்மனை வழிபடுவோர்க்கு கல்யாண வரம் கைகூடப் பெறுகிறது. மேலும் குழந்தை வரம் மற்றும் குடும்ப ஐஸ்வர்யம் ஆகியவற்றுக்காகவும் இத்தலத்தில் பக்தர்கள் பிரார்த்தனை செய்து கொள்வது வழக்கமாக உள்ளது. ஞாயிறு அன்று இராகு கால வேளையில் வடைமாலை சாத்தி இத்தலத்து பைரவரை வணங்கினால் அடுத்தடுத்து வரும் இடர்கள் துன்பங்கள் தூளாய்ப் போய்விடும்.
இத்தலத்து பெருமானை வழிபட்டால் இம்மைப்பயன்களும், மறுமைப்பயன்களும் கிடைக்கும் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். முத்தாநதியில் நீராடினால் சித்தி பெறுவதுடன் முக்தியும் கிட்டும் என்று புராண நூல்கள் கூறுகின்றன.

No comments: