ஹர ஹர நம: பார்வதி பதயேஹர ஹர மஹா தேவா

Friday, June 24, 2011

விருத்தகிரீஸ்வரர்

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர்

திருமணிமுத்தாற்றின் மேற்குக் கரையில், விருத்தாசலத்தின் தொன்மையான ஆலயம் அமைந்திருக்கிறது.

பொங்கி வந்த வெள்ளத்தை பழமலைநாதர் தமது திருக்கரத்தால் தீண்டி, மணிமுத்தாறாகத் திகழுமாறு அருள் புரிந்ததால், ஆறு புனிதமானது. இந்நதியினில் இறந்தவர்களின் எலும்புகளை விட்டால், அந்த எலும்புகளுக்குரியவர் நற்கதி அடைந்து விடுவார்கள் என்றொரு நம்பிக்கை. இதனாலேயே, ‘காசிக்கு சீலம் அதிகம் விருத்தாசலம்’ என்று சொல்லப்படுகிறது.
பிரம்மன் தொழுத இறைவனுக்கு இங்கு ஆலயம் எழுந்த வரலாறும் சுவையானது.

இறைப்பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட விபசித்து என்றொரு முனிவர், முதுகுன்றத்து வனத்தில் ஒரு மரத்தடியில் தவமிருந்தார்.

ஒருநாள்...

வனத்தில் இருந்த தெய்வச்சுனையில் நீராட வந்தாள் குபேரனின் தங்கை, நீராடுமுன் அணிகலன்களைக் கழற்றிக் கரையில் வைத்தாள். சிச்சிலிப் பறவை ஒன்று அவளது மாணிக்க மூக்குத்தியை இரை என்று எண்ணிக் கொத்திப் பறந்தது.

தனக்குப் பயனில்லை என அறிந்ததும், பறவை மூக்குத்தியைத் தவற விட்டது. அது ஆழ்தவத்தில் ஈடுபட்டிருந்த விபசித்தின் மடியில் விழுந்தது.

குபேரனின் தங்கையோ மாணிக்க மூக்குத்தியை தன்னிடம் ஒப்படைப்பவருக்குத் தனது அங்கத்தின் மற்ற அணிகலன்களை அன்பளிப்பாக அளிப்பதாக அறிவித்தாள்.

இது தெரியாமல், விபசித்து முனிவர் மூக்குத்தியை உரியவரிடம் ஒப்படைக்கும் நோக்கில் அவளை நாடி வந்தார். அறிவித்தபடி குபேரனின் தங்கை தனது அணிகலன்களை அன்பளிப்பாக அவரிடம் அளித்தாள்.

‘பொன்னார் மேனியனை நாடி வந்தனுக்குப் பொன் எதற்கு?’ என்று முனிவர் திகைத்தார்.

‘அவற்றைக் கொண்டு எனக்கொரு ஆலயத்தை எழுப்பு’ என அசரீரியாக ஆண்டவன் அவரைப் பணித்தான்.

முனிவரும், அணிகலன்களை வன்னி மரப்பொந்தினுள் வைத்துக் காத்து ஆண்டவனுக்கோர் ஆலயம் எழுப்பினார்.

ஆ தியில் பிரம்மன் அவனியை ஆக்கும் முனைப்பில், முதற்கண் நீரைப் படைத்தார். அடுத்து நெடும் நிலப்பரப்பை உருவாக்க முனைந்த போது, அசுரர்களான மதுகைடபர்கள் அவருக்கு அல்லல்கள் அளித்தனர். நான்முகன், நாராயணனை வேண்ட, மாலனும், மதுகைடபர்களை வெட்டி வீழ்த்தினார்.
நீரில் மிதந்த அந்த அசுரர்களின் உடற் பகுதிகள் இறுகி மண்ணுலகாய் மாறுவதற்கு மகேசுவரன் அருளினார்.

நீரும், நிலமுமாக உலகு உருவானது, அதனை அத்தனை அழகுடன் தானே படைத்து விட்டதாக அயனுக்கு ஆணவம் மிகுந்தது. அந்த ஆணவத்தை அடக்க மகேசன் தானே மாபெரும் மலையாக உருமாறி உலகெங்கும் வியாபித்து நின்றார்.

பிரம்மன் தான் படைத்த மலைகளை வைக்க இடமின்றித் தவித்தார். அவரது ஆணவத்தை அடக்க உருத்திரனே மலையாக உருவெடுத்து உலகை ஒளித்து உயர்ந்து நிற்கிறார் என்ற உண்மையை ஆனைமுகன் அயனிடம் அறிவிக்க பிரம்மனின் பித்தம் தெளிந்தது. ஆணவம் அழிந்தது.

மகேசனைப் பணிந்தார். தான் உருவாக்கிய மலைகளுக்கு இடம் அளிக்கச் சொல்லி இறைஞ்சினார். அவரை மன்னித்து, சிவன் தன்னைக் குறுக்கிக் கொண்டதோடு அகிலத்தின் அச்சாணியாக இத்தலம் விளங்கும் என்றும் அருளினார்.

பூவுலகில் தோன்றிய அந்த முதல் மலை விருத்தாசலம் என்று பெயர் கொண்டது. விருத்தாசலம் என்னும் வடமொழிச் சொல்லுக்கு பழமையான மலை என்று பொருள். அங்கு எழுந்தருளிய ஈசனை விருத்தகிரீசுவரர் என்று பிரம்மன் வணங்கி வழிபட்டார்.

முதுகுன்றம் என்று பைந்தமிழில் பாடப்பெற்றுள்ள இத்தலத்தின் ஈசன் பழமலைநாதர் என்று அன்புடன் அழைக்கப்பெறுகிறார்.

ஐந்தெழுத்து நமசிவாய மந்திரம் சிவபக்தர்களுக்கு உயிர்மூச்சு. அதைக் குறிப்பது போல், ஆலயத்துக்கு ஐந்து பிராகாரம், ஐந்து கோபுரம், ஐந்து நந்தி, ஐந்து கொடிமரம், ஐந்து தீர்த்தம் என்று சிறப்புற அமைந்துள்ளன. கிழக்கு இராஜகோபுரம் வழியே ஆலயத்துள் நுழைந்தால், முதலில் தீபாராதனை மண்டபம். அடுத்து நூறுகால் மண்டபம். இதன் மத்தியில் பலிபீடம், கொடிமரம், நந்தி.
நூற்றுக்கால் மண்டபத்தின் வடபுறமுள்ள சித்திர மண்டபத்தின் இருபுறங்களிலும் மண்டபத்தையே, சக்கரங்கள் இணைக்கப்பட்ட ரதமாக அமைத்து குதிரைகள் இழுப்பது போன்ற சிற்ப அமைப்பு. நுணுக்கமான கலை வேலைப்பாடுகள் கொண்ட தூண்கள்.

தென்மேற்கில் ஆழத்துப் பிள்ளையார் சந்நிதி. இவருக்குத் தனி கோபுரம். தனிக்கொடி மரம். பழமையின் உண்மை நிலையை பிரம்மனுக்கு உரைத்தவர் இந்தப் பள்ளத்து கணபதி. ஆழத்துப் பிள்ளையாரை தரிசித்து படியேறி வலம் வந்தால், வடமேற்கு மூலையில் இருபத்தெட்டு ஆகமங்களைக் குறிக்கும் இருபத்தெட்டு சிவலிங்கங்கள்.
முதல் பிராகாரமான தேரோடும் வீதி, கால ஓட்டத்தில் சுருங்கிவிட்டது. இரண்டாவது பிராகாரமும் ஆலயத்துக்கு வெளியில் அமைந்திருக்கிறது. மூன்றாவது பிராகாரம் முக்கியமான கைலாயப் பிராகாரம்.
கைலாயப் பிராகாரத்தின் நான்கு பக்கங்களிலும் உயரிய நான்கு கோபுரங்கள். ஒவ்வொரு கோபுர வாயிலின் உள்பகுதியிலும், நடன மாந்தரின் எழுபத்திரண்டு வகை புடைப்புச் சிற்பங்கள்.
கைலாயப் பிராகாரத்திலிருந்து கோயிலின் உள் செல்லும் கிழக்கு வாயிலில் கண்டராதித்தன் கோபுரம். இதனைக் கடந்தால் நான்காம் பிராகாரமான வன்னிடியப் பிராகாரம். தல விருட்சமான வன்னிய மரம் மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேலான இங்கே உள்து. விபசித்து முனிவருக்குக் கற்பகத்தருவாக இருந்த இந்த மரத்தின் கீழ் அவரது திருமேனி வடிவம் அமைக்கப்பட்டுள்ளது.
வடக்குப் பகுதியில் தனிக்கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கிறாள் பெரியநாயகி. கருவறையில் அன்னை கருணை ததும்பும் இன்முகத்துடன் நின்ற கோலத்தில் கனிவுடன் அருள் வழங்குகிறாள்.
கைலாயப் பிராகாரத்திலிருந்து கருவறை நோக்கிச் செல்லும் வழியில் பலிபீடமும், நந்தியும் அமைந்துள்ளன. அர்த்த மண்டபத்தின் வாயிலில் பிரமிக்க வைக்கும் வடிவில் டிண்டி, முண்டி என்னும் துவராபாலகர்கள்.
கருவறையில், தீப ஒளியில் பழமலலைநாதர் சிவலிங்க வடிவில் அற்புதமாக அருள்பாலிக்கிறார். சதாசிவ வடிவத்தின் மேல் ருத்திராட்சப் பந்தல் போடப்பட்டுள்ளது. பூவுலகை ஆதியில் அமைத்த ஈசனைப் பணிகையில் பரவசம் கூடுகிறது.

கருவறையைச் சுற்றி வரம் பிராகாரம் ஐந்தாம் பிராகாரம். பழமலைநாதர் தனக்களித்த பன்னீராயிரம் பொன்னை இங்கே மணிமுத்தாறில் போட்டு விட்டு, ஈசன் அருளாலேயே திருவாரூர் கமலாலயத் திருக்குளத்தில் திரும்பப் பெற்றார் சுந்தரர். இரு தலங்களிலும் பொன்னின் மாற்றை சோதித்துச் சொல்ல விநாயகர் முன்வந்தார். இரு தலங்களிலும் இந்தப் பிராகாரத்தில் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார்.
கருவறை கோஷ்டத்தில் வேறெங்கும் காண இயலா எழில் கோலத்தில் அர்த்தநாரீஸ்வரர்.

சித்தர்கள், துறவிகள், அகத்தியர், சுக்கிராச்சாரியார், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், அருணகிரிநாதர், இராமலிங்க அடிகளார் போன்ற புனிதர்கள் பழமலைநாதனை தரிசிக்க வந்த திருத்தலம் இது.

No comments: